கவிதை - இயற்கை
ரசித்த சில கவிதைகள்: இரை தேடிப்போன பறவை இருட்டிய பிறகும் கூடு திரும்பாததால் தூக்கமின்றித் தவிக்கிறது மரம்! - ரவிகிருஷ் ✦ யாருமற்ற தன் சவ ஊர்வலத்தில் தானே நடனமாடிக் கடக்கும் பழுத்த இலை. - நாகராஜ சுப்ரமணி ✦ நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும் ஒரு பூவைப் பார்த்துவிட்டு பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி அவசர அவசரமாகக் கண்களை மூடிக் கடவுளை வேண்டுகிறாள் ஒரு வேகமான காற்று வேண்டி. - பிரபு ✦ ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும் பிடித்திருக்கிறது அசைந்து மிதந்துவரும் பூவை. அது தங்களுக்கு என்று நினைத்து நீந்துகிறார்கள் அதன் திசையில். பூவோ நகர்கிறது நீச்சல் தெரியாது ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் நோக்கி. - கல்யாண்ஜி ✦ பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும். - நாஞ்சில்நாடன்