கவிதை - கமல் ஹாசன்

கமல் ஹாசன் அவர்களின் "மனித வணக்கம்கவிதை வரிகள் ரசிக்க..

தாயே, என் தாயே !
நான் உரித்த தோலே
அறுத்த கொடியே
என் மனையாளின் மானசீக சக்களத்தி, சரண்.

தகப்பா,  தகப்பா !
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று.
புரியாத வரியிருப்பின் கேள் !
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமையா, தமையா !
என் தகப்பனின் சாயல் நீ.
அச்சகம் தான் ஒன்று இங்கே
அர்த்தங்கள் வெல்வேறு.

தமக்காய், தமக்காய் !
தோழி, தொலைந்தே போனாயே?
துணை தேடி போனாயே?

மனைவி, காதலி !
நீ தாண்டா படியெல்லாம்
நான் தாண்ட குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும் வரை.

மகனே, மகனே !
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறு பிறப்பே
மரண சௌகர்யமே, வாழ் !

மகளே, மகளே !
நீயும் என் காதலியே
எனதம்மை போல
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை காதலித்த கணவனுக்குள் எனை தேடுவாயா?

நண்பா, நண்பா !
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, பகைவா !
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தை கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன் அம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, வாசகா !
என் சமகால சகவாசி, வாசி.
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் என  தோன்றின், பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம், நாளை உன் வரியில் நானும் தெரிவேன்.


Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

ஓய் என் கண்ணழகியே..